Tuesday, June 17, 2014

25 ஆண்டுகளுக்கு முன் இங்கு தான் நான் படித்தேன்...

.

பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

.


பொள்ளாச்சி, ஜூன் 15: பொள்ளாச்சியிலுள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் 1964ஆம் ஆண்டும் 1989ஆம் ஆண்டும் படிப்பு முடித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) மிகவும் உணர்ச்சிகரமாக நடைபெற்றது.

பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள சி.சுப்பிரமணியம் அரங்கில் காலை 10.00 மணிக்கு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு துவங்கியது. நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சங்கத்தின் (என்ஏபிஏஏ- நாபா) கெüரவத் தலைவர் கே.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

முன்னிலை வகித்த  ‘நாபா' தலைவர் எம்.மீனாட்சி சுந்தரம், முன்னாள் மாணவர் சங்கத்தின் சேவைப்பணிகளைப் பட்டியலிட்டார். அலும்னி சங்கத்தின் நன்கொடையால் ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.


‘நாபா'வின் செயலாளர் ஆர்.கலைமணி, பொருளாளர் பெரியசாமி, பாலிடெக்னிக் முதல்வர் ஆர்.மணிவண்ணன் ஆகியோரும் பேசினர். முன்னாள் மாணவர் சங்கத்தின் வருடாந்திர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலாளர் பேராசிரியர் சி.ராமசாமி, கல்வி நிறுவன வளர்ச்சியை விளக்கி, முன்னாள் மாணவர்கள் இந்த வளர்ச்சியில் இணைந்து பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்தார். தானும் 1964ஆம் வருடத்திய முன்னாள் மாணவர் என்று பெருமையுடன் அவர் குறிப்பிட்டார்.

அதன்பிறகு 1964இல் இங்கு படிப்பு முடித்து பொன்விழா காணும் முன்னாள் மாணவர்கள் கெüரவிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

அடுத்து 1989இல் இங்கு படிப்பு முடித்து வெள்ளிவிழா காணும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு துவங்கியது. சிவில் இன்ஜினீயரிங் பிரிவில் படித்த முன்னாள் மாணவர் டி.கிருஷ்ணகுமார் வரவேற்றார். முன்னாள் மாணவர்களின் பிரதிநிதிகளான ஏ.கே.லட்சுமி வெங்கட்ரமணன் (சிவில்), ஜே.மகேஸ்வரன் (மெக்கானிக்கல்), ஏ.பி.சுரேஷ்குமார் (இஇஇ), கே.பி.சிவானந்தம் (சிஎஸ்இ) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில் மாநிலம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் பழைய நினைவுகளை அசைபோட்டபடி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். முன்னாள் மாணவி ஆர்.ஜெயலட்சுமி (இசிஇ) நன்றி கூறினார்.

தங்கள் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய பாலிடெக்னிக்கிற்கு முன்னாள் மாணவர்கள் அனைவரும் உணர்ச்சிப்பெருக்குடன் நன்றி தெரிவித்தனர். மதிய விருந்துடன் விழா நிறைவுபெற்றது.

படவிளக்கம்: நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சந்திப்புக் கூட்டத்தில் பேசுகிறார் என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலாளர் பேராசிரியர் சி.ராமசாமி. உடன் அலும்னி அமைப்பின் நிர்வாகிகள் பெரியசாமி, எம்.மீனாட்சிசுந்தரம், கே.பாலசுப்பிரமணியம், ஆர்.கலைமணி, ஜே.மகேஸ்வரன், ஆர்.ஜெயலட்சுமி ஆகியோர்.


நன்றி: தினமணி (16.06.2014)

No comments:

Post a Comment