Thursday, March 3, 2011

மரபுக் கவிதை - 111



சிந்தைக்கினிய ஈசனானவன்


அறமுமானவன் பொருளுமானவன்
ஆர்க்கும் இன்ப அருவமானவன்.
புறமுமானவன் அகமுமானவன்
பூவினும் மெல்லிய வாசமானவன்.
மறமுமானவன் அருளுமானவன்
மாயமகற்றும் ஞானமானவன்.
நிறமுமானவன் நிர்மலமானவன்
நீதிநாட்டிடும் நியாயமானவன்.
திறமுமானவன் குணமுமானவன்
தீட்சையளிக்கும் குருவுமானவன்.

உறவுமானவன் உண்மையானவன்
ஊழ்வினை எரிக்கும் சோதியானவன்.
துறவுமானவன் துரியமானவன்
தூய்மையின் எளிய உருவமானவன்
பிறவுமானவன் உலகுமானவன்
பீடுயர்த்திடும் வாழ்வுமானவன்.
திறவுமானவன் தின்மையானவன்
தீமையகற்றும் கருவுமானவன்.
கறவுமானவன் கன்றுமானவன்
காரணமான ஈசனானவன்.

வரமுமானவன் வழியுமானவன்
வானவர் போற்றும் வள்ளலானவன்.
மரமுமானவன் மண்ணுமானவன்
மாதரின் தாய்மை உணர்வுமானவன்.
பரமுமானவன் உருவுமானவன்
பாதியைக் கொடுத்த நாதனானவன்.
இரவுமானவன் பகலுமானவன்
ஈடிணையற்ற லிங்கமானவன்.
சிரமுமானவன் அடியுமானவன்
சீர்மிகு வாழ்வின் சிந்தையானவன்.
.

.

No comments:

Post a Comment